அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள போபோப் தீவில் உள்ள சாண்ட் பாயிண்ட் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அலாஸ்காவின் சில பகுதிகளுக்கு, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிலிருந்து தெற்கே சுமார் 87 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அலாஸ்காவின் கடற்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். எனினும், இதன் பின் ஒரு மணி நேரத்திற்குப் பின் சுனாமி எச்சரிக்கை முற்றிலும் நீக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை.