மேற்கு திசைக்காற்றின் வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் தேனி, விருதுநகர் உள்பட 9 மாவட்டங்களில் மிதமான மழையும், நீலகிரியில் கனமழையும் இன்று பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 102 டிகிரியைத் தாண்டியும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதன் காரணமாக அனல் காற்று பல்வேறு இடங்களில் வீசி வருகிறது. வெப்ப அளவு நாளுக்கு நாள் கூடி வருவதால் குழந்தைகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும். மேலும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.