பெருந்தலைவர் காமராஜர் அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவு அல்ல, நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 123வது பிறந்த நாள் விழா இன்று ( ஜூலை 15) மாநிலம் முழுவதும் கோலாகலமா கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இந்நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று! கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!” எனவும் பதிவிட்டுள்ளார்.