திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதனால் பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர் நகர் மூழ்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரம் அமைந்துள்ள இந்தக் கோயிலில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக. கடந்த 27ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
கடந்த 1-ம் தேதி முதல் கோயில் உள்பிரகாரத்தில் மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து தினமும் காலை, மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை 12 வது கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றது.
இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதேபோல், 164 அடி உயர ராஜகோபுரத்தில் ஒன்பது கும்ப கலசங்கள், சண்முகர் ராஜ கோபுரத்தில் உள்ள ஐந்து கலசங்கள், மூலவர், சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானை கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கும் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மீது டிரோன்கள் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா முழக்கம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கோயில் தக்கார் அருள்முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் 6,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.