‘ஐ லவ் யூ’ சொல்வது பாலியல் உள்நோக்கம் இல்லை என மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள கத்தோல் எனும் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 2015-ம் ஆண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 25 வயது வாலிபர் ஒருவர், அந்த சிறுமியின் கையைப் பிடித்து ‘ஐ லவ் யூ’ என்று கூறிவிட்டு டூவீலரில் சென்று விட்டார்.
இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்கள் அளித்த புகாரின் பேரில், காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு நாக்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அந்த வாலிபருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.
தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அந்த வாலிபர், மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார். கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஊர்மிளா ஜோஷி, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் வாலிபருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு அளித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த தீர்ப்பில், சிறுமியிடம் ஐ லவ் யூ என அந்த வாலிபர் கூறியதில் பாலியல் உள்நோக்கம் எதுவும் இல்லை, அவர் தனது உணர்வுகளையே வெளிப்படுத்தி இருக்கிறார். தகாத முறையில் தொடுதல், ஆடைகளைக் கழற்றுதல், அநாகரீகமான செய்கைகளைச் செய்தல், பெண்ணின் கண்ணியத்தை அவமதிப்பது போன்றவை தான் பாலியல் நோக்கமாக கருத முடியும்.
இந்த வழக்கில் அந்த வாலிபர் ஐ லவ் யூ என கூறியதில் பாலியல் ரீதியான உள்நோக்கம் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. எனவே, இது மானபங்கம் அல்லது பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது என்பதால் வாலிபருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளிக்கிறது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.