நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பாக ஆளுங்கட்சி, அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தும். அதன்படி இந்த மழைக்காலக் கூட்டத் தொடரை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் வருகிற ஜூலை 19-ம் தேதி நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மேலும் ஆகஸ்ட் 12-ம் தேதி முடிவடைய இருந்த கூட்டத்தொடர் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 மற்றும் 14-ம் தேதிகளில் அமர்வுகள் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பஹல்காம் விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்படலாம் என்பதாலும், சில முக்கியமான மசோதாக்களை அறிமுகப்படுத்த இருப்பதாலும் கூட்டத் தொடர் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.