திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் இரண்டாவது நாளாக திருப்பரங்குன்றத்தில் நேற்றும் பாஜக உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்பட நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்பட ஏராளமானோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 113 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



