தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில், நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வித் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், இந்த திட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய மறுத்தன. இதனால், இந்த மாநிலங்களுக்கு எஸ்எஸ்ஏ திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
இந்த திட்டத்தை ஏற்றதால் தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதே நடைமுறை கேரளா அரசும் பின்பற்றியது. இதற்கிடையே கேரளாவை ஆட்சி செய்யும் இடது முன்னணி அரசு, பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்க சம்மதம் தெரிவித்தது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பின்வாங்கியது.
இந்த நிலையில், மக்களவையில், பி.எம்.ஸ்ரீ திட்டத்திற்கான நிதி விடுவிப்பு தொடர்பாக கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில், நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார்.




