பாபர் மசூதி மீண்டும் கட்டுவேன் என்று அறிவித்த எம்எல்ஏ ஹூமாயுன் கபீரை கட்சியில் இருந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதியைப் போன்று, மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் மசூதியை கட்டுவேன் என்று தெப்ரா தொகுதி திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹூமாயுன் கபீர் அறிவித்திருந்தார்.
இதற்கு டிசம்பர் 6- ம் தேதி அடிக்கல் நாட்டுவேன் என்றும், மூன்று மாதங்களுக்குள் பாபர் மசூதியை கட்டி முடிப்பேன் என்றும் கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஹூமாயுன் கபீரின் அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹூமாயுன் கபீரை சஸ்பெண்ட் செய்து மேற்கு வங்க முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் கொல்கத்தா மேயர் பிர்ஹாத் ஹக்கீம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களில் ஒருவர், பாபர் மசூதி கட்டுவேன் என்று அறிவித்தார். திடீரென பாபர் மசூதியை கட்டுவது ஏன்? அவரை நாங்கள் பலமுறை எச்சரித்தோம். ஆனால், அவர் கேட்கவில்லை. தற்போது அவரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்,' என்று கூறினார்.
இந்த நிலையில், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஹூமாயுன் கபீர் டிசம்பர் 22-ம் தேதி புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். அத்துடன் மேற்கு வங்கத்தில் அவரது கட்சி 135 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார்.




