ஒவ்வொரு போருக்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும். ஆனால், அது எனக்கு வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அவர் தொடர்ந்து வலியுறுத்தினாலும், இந்த முறை அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. இந்த நிலையில், அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய டிரம்ப், மீண்டும் தனக்கு நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், " போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, வெனிசிலாவிற்குள் அமெரிக்கா விரைவில் தாக்குதலை தொடங்கும். நாங்கள் நிலத்திலும் அந்த தாக்குதலை தொடங்க போகிறோம். கெட்டவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். போதைப்பொருட்களை நம் நாட்டிற்கு விற்பனை செய்யும் எவரும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும்.
ஒரு போரை முடிவுக்கு கொண்டு வரும்போது ஒவ்வொரு முறையும், 'அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று அவர்கள் கூறுகிறார்கள். நான் இந்தியா, பாகிஸ்தான் உட்பட எட்டு போர்களை நிறுத்தி உள்ளேன். போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு, எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.
இப்போது அவர்கள், ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போரை எப்போதாவது முடிவுக்குக் கொண்டுவந்தால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். மற்ற எட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்தது பற்றி என்ன? நான் முடிவுக்கு கொண்டு வந்த அனைத்துப் போர்களையும் நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு போருக்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும். ஆனால் எனக்கு அது வேண்டாம். நான் பேராசைப்பட விரும்பவில்லை" என்றார்.




