அன்புமணியிடமிருந்து பாமகவை மீட்க டாக்டர் ராமதாஸ் குழு அமைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில் பதவிக்காக டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ்க்கும் இடையே நடந்து வரும் கருத்து மோதல்களால் கட்சி இரு பிரிவுகளாக இயங்கி வருகிறது. இது தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை அணுகி கடிதங்களை அளித்தனர். இதையடுத்து, பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி வரை செல்லுபடியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் கடந்த 28-5-2025 அன்று காலாவதியாகி விட்டது., புதிய தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், 30-5-2025 முதல் ராமதாஸ் கட்சியின் புதிய தலைவராக இருப்பதாகவும் கடிதங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஆணைய பதிவுகளின்படி, பாமக நிர்வாகிகளின் பதவிக்காலம் 1-8-2026 வரை செல்லுபடியாகும். மேலும் அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக உள்ளார்.
ராமதாஸ் கட்சியின் தலைவராக இருப்பதாகக் கூறினால், கட்சியின் நிர்வாகிகள் தொடர்பான விஷயத்தைத் தீர்க்க பொருத்தமான கட்சி அமைப்பு அல்லது தகுதி வாய்ந்த நீதிமன்றத்தை அணுகிக்கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதம் ராமதாஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது தரப்பில் இருந்து பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.இந்த நிலையில், பாமகவை அன்புமணியிடமிருந்து மீட்க அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குழு அமைத்துள்ளார். இந்த குழுவில் ஜி.கே.மணி, சதாசிவம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் பல்வேறு சட்டப்போராட்டங்களையும் ராமதாஸ் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




