டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஜம்மு-காஷ்மீரில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை பகுதியில் நவம்பர் 10-ம் தேதி கார் வெடித்து சிதறியதில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த காரை ஓட்டியவர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி என்பதும், தற்கொலைப் படையாக மாறி, அவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இந்தியாவையே உலுக்கிய இந்த தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அல் பலாஹ் மருத்துவ பல்கலையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று (டிச.1) சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், காஷ்மீரின் புல்வாமா, ஷோபியன் மற்றும் குல்காம் மாவட்டங்களில் 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருந்த, பயங்கரவாதிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.




